Sri #APNSwami #Writes #Article |#Well Wishers | #Editorial |#SriNrusimhapriya

                                         Well Wishers

தண்ணீரின் தேவையை வலியுறுத்தும் அற்புதமான Editorial (ஸம்பாதகர் குறிப்பு) by Sri APN Swami.
விகாரி – வைகாசி – May 2019 – ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா Issue.

ஆங்கிலத்தில் அதிகமாக உபயோகத்தில் உள்ள வார்த்தையிது. ‘நலம் விரும்பிகள்’ என நாம் தமிழில் சொன்னாலும் ஆங்கில மோஹத்தில் ஆட்பட்டவர்களுக்கு இந்த வார்த்தை மிகவும் பிடித்தமானதாகும்.  அதுபோன்றே ஒரு சொல் நன்றாகச் செய்யப்பட்டது என்றால் நன்று, நன்று என்பதற்குப் பதிலாக well done என்கிறோம்.  இந்தப் பாராட்டு மிகவும் ஆனந்தமளிக்கக் கூடியது. ஸமீபத்தில் ஒரு உபந்யாஸகர் வெகு சமத்காரமாக இந்த வார்த்தையை உபயோகித்ததை ரஸித்து இங்கு பகிர்கிறோம்.

அதாவது ஸ்வாமி தேசிகனிடம் ஒருவன் போட்டியிட்டான்.  தான் கொடுக்கும் கோணல்மாணல் கற்களைக் கொண்டு ஒரு கிணறு வெட்டச் சொன்னான். தேசிகனும் அதைச் செய்து முடித்தார்.  அப்போது ஸ்வாமியை எப்படிப் பாராட்டுவது?  எனும்போது, நகைச்சுவையாக, well done என்றார் அந்த உபந்யாஸகர்.

அதாவது கிணறு முடிந்தது என்பதை வார்த்தை ஜாலத்தால் வெளிப்படுத்தினார்.  கிணறு என்பதற்கு ஆங்கிலத்தில் well என்றுதானே பொருள்!

எனினும், இந்தக் கட்டுரையின் நோக்கம் ஜாலம் அல்ல, ‘ஜலம்‘.

நீரின்றி அமையாது உலகு என்பர் பெரியோர். தற்போது தமிழகத்தில் அனல் சுட்டெரிக்கிறது.  வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.  ஏறத்தாழ எல்லா நீர்நிலைகளும் வறண்டு விட்டன. வானிலை அறிக்கையைக் கவனித்தால் நிலைமை இன்னமும் மோசமாகும் என்றே தோன்றுகிறது. செய்வது அறியாமல் அரசாங்கமும், மக்களும் தவியாகத் தவிக்கின்றனர்.

இந்து அறநிலையத்துறையினர் எல்லாக் கோவில்களிலும் வருணஜபம், பாசுரங்கள், பதிகங்கள் பாடி ப்ரார்த்தனை செய்ய வேண்டும் எனும் சுற்றறிக்கையை அளித்துள்ளனர்.  முதன் முறையாக இத்தகைய அறிவிப்பை அரசாங்கம் வெளியிடுவது ஆனந்தமளிக்கிறது.  அதேசமயம், தண்ணீரின் தேவை எத்தகையது என்பதை மக்கள் இன்னமும் உணரவில்லையோ எனும் ஏக்கமும் உண்டாகிறது.

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலாக ஒருபடம் வெளியிடப்பட்டது.  அதில் மாட்டுவண்டியில் பயணம் செய்யும் சில வைதிகர்கள் அண்டா, குடம் முதலியவற்றில் தண்ணீர் கொண்டு வருகின்றனர். இது நமது மயிலை ஸ்ரீநிவாஸன் ஸன்னிதியின் நிலை.  பெருமாள் திருவாராதனம், திருமஞ்ஜனம் செய்வதற்குக் கூட கிணற்றில் தண்ணீர் இன்றி வறண்டிருப்பதால் சற்று தொலைவில் உள்ள ஸ்ரீமதாண்டவன் ஆச்ரமக் கிணற்றிலிருந்து ஆசாரம் கெடாமல் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.

உண்மையில் மக்கள் இங்கு ஒரு விஷயத்தை யோசிக்க  வேண்டும். ஒரு காலத்தில் பெரும் கிணறுகள் எல்லோருடைய இல்லங்களிலும் இருந்தன. அதிலிருந்து இறைக்கும் தண்ணீர், சிக்கனமாகவும் மறுசுழற்சி (recycling) எனும் விதத்தில் தோட்டத்துச் செடிகளுக்கு பாய்வதாகவும் இருந்ததால் பூமியின் ஈரப்பதமும், தண்ணீர் தேக்கமும் நிறைவாக இருந்தது.  அதுதவிர, திருக்கோயிலின் குளங்கள் பெரும் நீராதாரமாக இருந்தது. சென்னையையும், அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் மட்டும் சுமார் ஆயிரம் குளங்கள் இருந்தன!!!

காலப்போக்கில் தூர்ந்தும், ஆக்ரமிப்புகளினாலும் தற்போது ஐம்பது குளங்கள் மட்டுமே உள்ளதாக ஒரு தகவல் தெரியும்போது நெஞ்சம் குமுறுகிறது.  எவ்வளவு பெரிய தண்ணீர்த் தேக்கமாகத் திருக்குளங்கள் விளங்குகின்றன! தற்போது மயிலாப்பூரில்,  சித்திரைக் குளம், கபாலீச்வரர் குளம் முதலிய பெரும் குளங்கள் ஏறத்தாழ குப்பை மேடுகளாகிவிட்டன.

நம் முன்னோர்களை முட்டாள்களாக நினைத்து இன்னும் எத்தனை காலம் நாம் அல்லல்படப் போகிறோம் பெரும்பாலான திவ்யதேசங்களில் பெருமாளுக்குத் திருவாராதனமே குழாய்த் தண்ணீரில் தான்!  இந்நிலையிலும் சில பெரியோர்கள் இன்னமும் கிணற்றுத் தண்ணீரையே நாடியுள்ளனர்.  நமக்கு அவர்கள் வெறுக்கத்தக்க நபர்களாயிருப்பது வேதனையிலும் வேதனை.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவோரின் முதல் சாதனையே பழைய கிணறுகளைத் தூர்த்து அதன்மீது வாகன நிறுத்துமிடம் கட்டுவதுதான்.  இதனால் ஏற்படும் விளைவுகளை எவருமே எண்ணிப் பார்ப்பதில்லை.  ‘இனி வரும், எதிர்கால ஸந்ததியினர், மாத்திரை வடிவில்தான் தண்ணீரைக் காண்பர்’ என நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது கவனத்திற்குரியது.

பருத்திப்பட்டு ஸஞ்சாரத்தில் ஸ்ரீமதழகியசிங்கர் தெரிவித்த கருத்தினையும் எண்ணிப் பார்க்க வேண்டும். 45ம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர், நிறைந்த ஜலவசதி கொண்ட சேலையூர் ஸ்ரீமடத்தை நிர்மாணம் செய்தார்.  ஒன்பது கிணறுகள் கொண்ட இம்மாபெரும் வளாகம், தற்போது வறண்டுள்ளது.  எனவே ஜலவசதி கொண்ட பருத்திப்பட்டில் ஒரு மடம் நிர்மாணிக்க வேண்டும் என்று சொன்னது தற்போதைக்கு ஸமாதானமாக இருப்பினும், இன்னும் இருபது வருடங்களில் அந்த இடமும் என்ன ஆகுமோ! எனும் பயமும் உண்டாகிறது.

மழை வேண்டி பாராயணங்களும், யாகங்களும், ப்ரார்த்தனைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.  காஞ்சி தூப்புலில் செய்த வருண ஜபத்தின் பலனாக சுமார் ஒன்றரை மணிநேரம் நல்ல மழை பெய்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் இது முழுதும் போதுமானதன்று.  இனியாவது இயற்கையுடன் இணைந்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.  வறட்சியின் நடுவே தமிழகத்திற்கு வரவிருந்த ஃபானி எனும் புயல், ப்ரம்மாண்டமாக ஒடிசாவைத் தாக்கியுள்ளது.  தமிழகத்திற்கு ஆபத்தில்லை என்றாலும், ஒடிசாவின் நிலைமை மிகவும் மோசமாயுள்ளது.  தமிழகத்திற்கு வரவேண்டிய மழையும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

மரங்களால் மழை பொழியும் என்பதற்கேற்ப, ஸ்தல வ்ருக்ஷங்கள் கோவில்களில் வளர்ந்தன.  காரண, காரியம் தெரியாமலேயே நாம் அனைத்தையும் அழிப்பது, மனித குலத்திற்கே மாபெரும் கேட்டினை விளைவிக்கும்.

இனிமேலாவது இயற்கையைக் காப்பது நமது ஸந்ததிகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் சேமநிதி (Fixed Deposit) என உணர்ந்து செயல்பட வேண்டியது தற்போதைய சூழ்நிலையில் ஆவஶ்யகமாகும்.  கிணற்று நீரை முகர்ந்து உபயோகிக்கும் வைதிகர்களாக இல்லாதிருப்பினும், அதன் அருமை உணர்ந்து, தூர்க்காமல் இருக்கலாம்.  அவ்விதம் செய்தால் உண்மையில் நாமும் Well Wishers தாம்!

5 thoughts on “Sri #APNSwami #Writes #Article |#Well Wishers | #Editorial |#SriNrusimhapriya

  1. R S MURALIDHARAN RAMANUJADHASAN May 25, 2019 / 9:54 am

    WELL DONE , well said swamin ,

    Liked by 1 person

  2. R S MURALIDHARAN RAMANUJADHASAN May 25, 2019 / 9:54 am

    WELL DONE , well said swamin ,

    Liked by 1 person

  3. suryanarayananblog May 25, 2019 / 7:55 pm

    அருமையான புத்திமதி. நம் மயிலையில் எனக்கு தெரிந்த நான்கு. வீடுகளில் கிணறு தூர்க்கப்பட்டு வீடு கட்டபட்டு வாடகைக்கு விடப்பட்டது. பெரிய்ய படிப்பு படித்தவர்கள். அவர்களும் இங்கே ஆமாம் ஆமாம் என போடலாம். APN ஸ்வாமி ஜி சொன்னபடி charity begins at home. மறந்ததினால் வந்த வினை

    Liked by 1 person

  4. suryanarayananblog May 25, 2019 / 7:56 pm

    Reblogged this on suryanarayananblog and commented:
    அருமையான புத்திமதி. நம் மயிலையில் எனக்கு தெரிந்த நான்கு. வீடுகளில் கிணறு தூர்க்கப்பட்டு வீடு கட்டபட்டு வாடகைக்கு விடப்பட்டது. பெரிய்ய படிப்பு படித்தவர்கள். அவர்களும் இங்கே ஆமாம் ஆமாம் என போடலாம். APN ஸ்வாமி ஜி சொன்னபடி charity begins at home. மறந்ததினால் வந்த வினை

    Liked by 1 person

  5. Venkatesh Sarangan May 28, 2019 / 3:09 pm

    Very true. We have lost touch of our roots , not sure we are proceeding towards.

    We should at least now think about the future and protect of surroundings.

    Liked by 1 person

Leave a comment