அயோத்தியாபுரியில் ருஷபத்துவஜன் எனும் அரசன் ஆண்டு வந்தான். அவன் மகன் ருக்குமாங்கதன். ருக்குமாங்கதன் அரசனானபோது திருநந்தவனம் வைத்து மலர்களைக் கொண்டு எம்பெருமானைப் பூசித்து வந்தான். அந்நந்தவனத்தில் பல சிறந்த மலர்களிருந்தன. அதனைத் தேவேந்திரன் அறிந்து ரம்பை முதலான தெய்வலோகப் பெண்களின் உதவியால் அம்மலர்களைத் தான் பெற்று வந்தான். மலர்கள் குறைவது அரசனுக்குத் தெரிந்ததும் காவலாளர்களை அமைத்தான். அவர்காளாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனால் அரசன் அவர்களைத் தண்டித்தான். அவர்கள் அருகே இருந்த ஒரு தவசியைப் பிடித்துக் கட்டி அரசனிடம் கொண்டு வந்தனர். அரசன் அவர் கட்டுக்களை மெல்ல அவிழ்த்து விசாரித்தான். அவர் உண்மையைக் கூறிக் கொம்மட்டிக் கொடியைப் பயிரிட்டால் அவர்களைக் கண்டு பிடிக்கலாம் என்று கூறினார். அரசன் அவ்வாறே செய்தான்.
ஒரு நாள் மலர் பறித்துக்கொண்டு செல்லும் ரம்பா ஸ்திரீகளில் ஒருத்தி காலில் அக்கொடி பட, அவள் தெய்வப் பிறவியின் வலிமையையிழ்ந்து தேவலோகம் செல்லமுடியாது நின்றாள். காவலாளர் அச்செய்தியை அரசனுக்கு அறிவித்தனர். அரசன் அங்கு வந்து அவளை விசாரித்தான். அவள் உண்மையைக் க்றினாள். பின், அரசன் அவளை நோக்கித் தேவலோகம் செல்லத்தக்க உபாயம் யாதெனக் கேட்டான். அவள் ஏகாதசி தினத்தன்று பட்டினி கிடக்கும் ஒருவர் அதன் பலனை எனக்குக் கொடுத்தால்தான் தேவலோகம் செல்லக் கூடும் என்று கூறினாள். அரசன் ஏகாதசி தினத்தில் பட்டினி இருக்கும் விரதத்தை அனுஷ்டிப்பார் எவரேனுமுண்டோ என்று பலரை விசாரித்தான். ஒருவரும் அகப்படவில்லை. அப்போது அத்தேவலோகப் பெண் அரசனது கைத்தாயை வரவழைக்க வேண்டினள். அவளும் வந்தாள். அவளை நோக்கித் தேவலோகப் பெண், அம்மா நீ ஒரு நாள் கோபத்தால் புசியாமல் இருந்தாய், மறுநாட் காலையில் புசித்தாய். நீ புசியாமலிருந்த நாள் துவாதசி. அவ்விஷயம் உனக்குத் தெரியாதிருந்தும் புண்ணியம் செய்தாய். அப்புண்ணியத்தை எனக்குக் கொடு, என்று கேட்டாள். அவளும் இசைந்து கொடுக்கத் தேவலோகப் பெண் தேவலோகம் போய்ச் சேர்ந்தாள்.
அன்று முதல் ருக்குமாங்கதன் நாட்டிலுள்ளார் அனைவரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும்படி கட்டளையிட்டு அத்தினத்தில் யாவரும் அறிய பேரிகை முழங்கி வந்தான். அதனால் ஒருவரும் நரகலோகம் அடையாது சுவர்க்கம் புகுந்தனர். அதனால் எமன் பிரம்மனிடம் முறையிடப் பிரம்மன் ஊர்வசியை அழைத்து ருக்குமாங்கதனை வசப்படுத்துமாறு கட்டளையிட்டார். அவ்வாறே ஊர்வசி மிக்க அழகுடன் பூமியில் தோன்றி ருக்குமாங்கதனை அடைந்து தன் கருத்தைப்போல் நடப்பதாக அவனிடமிருந்து வாக்குறுதி பெற்றுக் கொண்டு அவனோடு வாழ்ந்து வந்தாள். ருக்குமாங்கதன் தன் மகன் தன்மாங்கதனை அரசனாக்கி விட்டு ஊர்வசியோடு இன்பம் நுகர்ந்து வந்தான். ஒரு நாள் காலையில் ஊர்வசி ருக்குமாங்கதனுக்குத் தாம்பூலம் மடித்துக் கொடுக்கையில் பேரிகை முழக்கம் கேட்டது. ருக்குமாங்கதன் அன்று ஏகாதசி தினமாதலால் தாம்பூலம் கொள்ள மறுத்தான். ஊர்வசி வாக்கு மாறியதைக் கூறி அவனை விட்டுப் பிரிந்து காட்டின் வழியே நடக்கலானாள். தன்மாங்கதன் விரைந்து அவளைத் தடுத்து அழைத்துவந்து தந்தைபால் விடுத்தான். அப்பொழுதும் ருக்குமாங்கதன் தாம்பூலம் கொள்ள மறுத்து வேறு எது செய்யவும் ஒப்புக் கொண்டான். ஊர்வசி, தன்மாங்கதன் கழுத்தை வாளால் வெட்டச் சொன்னாள். உடனே ருக்குமாங்கதன் வெட்டினான். அவ்வாள் தன்மாங்கதன் கழுத்தில் மாலையாக விழுந்தது. அப்பொழுது மும்மூர்த்திகளும் தேவேந்திரனும் தோன்றினர். அரசனும் அந்நகரிலுள்ள ஏகாதசி உபவாசிகளும் வைகுந்தம் சேர்ந்தனர். ஏகாதசியன்று உபவாசத்துடன் எம்பெருமானைச் சேவிப்பவர் வைகுந்தம் அடைவர் என்பது நிச்சயம்.