“அருளாளன் பேரருள்” Part – 7
அன்று அங்கு பம்பைக்கரையில் அனுமான் சொன்ன வார்த்தை இன்று இங்கு அனுஷ்டான குளக்கரையில் வரதனின் திவ்ய திருமேனியை சேவித்தபோதும், இருபுறமும் உபயநாச்சியமாருடன் சேர்ந்த சேர்த்தி “மின்னல் கொடிகளால் சேர்ந்த (சூழ்ந்த) காளமேகம் போன்றது” எனும் வேத வாக்கியத்தின் பொருளை ஸ்ரீபாஷ்யகாரரின் சிஷ்யர்களாகிய நமக்குத் தெளிவாக காண்பிப்பது போன்றதொரு திருக்கோலமும், ஏரணிகீர்த்தி ராமானுஜர் வரதனின் வைபவத்தை அனுபவித்தோம். இனி “சார்ங்கமென்னும் வில்லாண்டான்” பற்றி பார்ப்போம்.
தொடர்ந்து வரதனுடைய வைபவங்களை அனுபவித்திடுங்கள்…
இனி ஸ்ரீAPN ஸ்வாமியின் அருளாளன் பேரருள் Part – 7 தொடரும்…
சார்ங்கமென்னும் வில்லாண்டான்:
இனி திருஞ்ஜனம் முடிந்ததும் இந்த நாளின் ஏற்றத்தை வெளிப்படுத்துவதுமான திருக்கோலம். வரதன் விந்த்ய மலைக்காடுகளிலிருந்து வேடுவன் கோலத்திலன்றோ (கையில் வில்லுடன்) ராமானுஜனை அழைத்து வந்தான். ஆகையால் ஒரு கையில் கோதண்டமும், வலது கையில் அர்த்த சந்திர (அறைச்சந்திர) பாணமும் ஏந்தி, சவாரி பாகை போன்ற தலைப்பாகையில்லாமல் காட்டுவாசி கோலத்தில் ஒரு தலைப்பையுடன் நிற்கும் கோலம் சேவிப்பார்கள் மதியெல்லாம் உள்கலங்கி, மனம் மயங்கி நிற்பர்.
இங்குதான் மண்டோதரியின் மங்களாசாஸனம் அனுபவித்துவிட வேண்டும். மஹேஸ்வாஸ என்று ஸகஸ்ர நாமத்தில் ஒரு திருநாமம். பெரும் வில்லைக் கையில் பிடித்தவன் அத்திரவரக்கன் முடிபத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திறலோன். அவனை மண்டோதரி கொண்டாடுகிறாள்.
“ஆஹா இதோ இங்கு தெளிவாகத் தெரிகிற அவனே பரமாத்மா, மஹாயோகி ஸநாதந (பெரியயோகியாக எல்லா காலத்திலிருப்பவன்) நடுவும், முதலும், முடிவும் இல்லாதவன் எல்லாவற்றைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவராக ஸர்வ ஆதாரபூதனாக, சங்குசக்கரம் ஏந்தும் தடக்கையனாக பிராட்டியுடன் கூடியவனாக, எல்லாவுலகுக்கும் ஸ்வாமியாக, உண்மையான பராக்கிரமம் உடையவன்” என்று பலவாறு போற்றுகிறான்.
இது தெளிவு என்னும் போதே, “லீலா விபூதியில் வந்து பிறந்து தன் அவதாரத்தின் மேன்மையை மறைத்துள்ள ராமன்” என்றாள் மண்டோதரி அங்கு அவள் ராமனை நேராகக் கண்டுரைத்தது இங்கு அர்சையில் வரதனை சேவிக்கும் போது உத்தர வேதிக்குள்ளே வந்துதித்த புனிதன் காணப்படுகிறான்.
ராமாயணத்தில் பிரமனை முன்னிட்ட ப்ரார்த்தனையால் யாகத்தில் ஆவிர்பவித்தான். “தேவர்கள் இவ்விதம் ப்ரார்த்தனை செய்யும் போதே சங்குசக்ர கதாபாணியாக, பொலிந்திருண்ட கார்வானின் மின்னே போல் தோன்றினான் மஹாவிஷ்ணு” என்கிறார் வால்மீகி இங்கும் பிரமனின் யாக வேள்வியில், புகலோங்கு பொன்மலையன்னதோர் புண்ணிய கோடியுடன் தோன்றினவன் வரதன்.
ஆகையாலன்றோ இன்று இங்கு ராமனாக் சேவையாகிறான். எனவே “தெளிவாகத் தோன்றுகிறதே இவனே பரம்பொருள்” எனும் மண்டோதரியின் வாக்கியம் இங்கு மெய்யுறுகின்றது.
இதுவரை அறியாமலிருந்தும் “என்னிடமிருந்தே நினைவும் அறிவும்” “என்னையறியும் புத்திதனை நானேயளிக்கிறேன்” எனும் கீதையின் வாக்கியத்தின்படி அவனருளால் அவனை உணர்ந்தவர்க்கு தெளிவாக தெரிகிறான்.
அவன் மஹாயோகி – யோகி, யோகவிதாம் நேதா, ப்ரதான புருசேஸ்வர: என்பது ஸகஸ்ர நாமம் இங்கு மண்டோதரி மஹாயோகி – என்றழைக்கிறாள். அதன் பொருள் – ஸமஸ்த கல்யாண குணங்களும் உடையவன் (உயர்வற உயர்நலம் உடையவன்) “குணங்களுடன் கூடிய இப்பரமாத்மா எப்போதும் மங்களகரமானவன்.
“உகவாதார் உன் அன்புக்குத் தோற்பர். உகந்தவர் உன் அன்புக்குத் தோற்பர்” என்றும்படி உகவாதார், உகந்தர் என இருவரையும் தன்பால் ஈர்க்கும் திருக்கோலம் பூண்டான் மஹாயோகி. உகவாதாரும் இவ்வடிழகு கண்டு உகப்பதுண்டே. “யார் கொல் இவ்வல்லில் ராமன் என்றாள்” என்று சூர்பனைகையும் வில்லைக் கையில் கொண்ட வீராதி வீரனைக் கண்டு காமுற்றாள்.
இவ்விடத்தில் மண்டோதரி விச்வாமித்ரரையும் விஞ்சினாள் என்பர் பூர்வாசார்யர். ஏனெனில் அவர் மஹாத்மா என்று ராமனைக் கண்டார். ஆனாலிங்கு மண்டோதரி பரமாத்மா என்று சதுர்புஜ ராமனைக் கண்டு பரதத்வ நிர்ணயம் செய்கிறாள். அதுதவிர ஸ்ரீவத்ஸம், தினத்தனையும் திருமகளை விடாத தன்மையென்று; சூரியனை விட்டு ஒளி பிரியாதப்போலே வரதனை விட்டு பிரியாத வடிவினையில்லா மலர்மகள் மார்பனைக் கொண்டாடுகிறாள்.
திருக்கோலத்தில் இரண்டு திருக்கைகளில் தேவையானாலும் அடியார்க்கு மாணவனின் 2 மால்வரைத்தோள் திருமுகத்து செல்வத்திருமாலால் தோன்றினான் அவனே பரமாத்மா மாமாயன் காக்கும் இயல்பினன் அதனை இங்கு வெளிப்படை.
இவ்வைபவத்தை சூர்ப்பனகை வாயிலாக அறிவது விசேஷம். எம்பெருமானின் வடிவழகை சூர்ப்பனகை அனுபவித்தது போன்று அனுபவித்தல் அரிது ஆனால் அவளின் அதீதமான காமம் பிராட்டியை விடுத்து பெருமானிடம் சென்றது அறிவின் காரணமாயிற்று ஆனாலும் கதிராயிரம் இரவி நீ மூடிய நாக வில்லேந்திய திருக்கோலம் அவள் கண்டது இதே வரதர் அதனுடைய தன்றோ !
வில்மலை வல்லவன்
வீரத்தோதோளொடும்
கல்மலை நீகர்க்கல்
கனிந்த நிலத்தின்
நல் மலை அல்லது
நாம மேருவும்
பொன்மலைஆதலால்
பொருவலாது என்பாள்.
2746 -கம்பராமாயணம்
(வில்லால் போர் செய்ய வல்லவனாகிய இவனுடைய வீரம் பொருந்திய தோள்களோடும், வெறும் கல்லால் அமைந்த மலைகள் உப்பு ஆஹா !முதிர்ந்த மயமான அழகிய மலை இல்லாமல் பொன்மலை என்னதான் ஏழுமலை ஒக்குமோ என்றால் அதுவும் ஒப்பு நோக்க கரியது) என்கிறான்.
இவை சாமானியமான உவமைகளானாலும், வேதாந்திகளோடு போட்டி போடும் அளவிற்கு திவ்ய திருமேனியை வர்ணிப்பது கண்டால் அகம் குழையும். ராவணன், சூர்ப்பனகை உரையாடலில் கம்பர் இதனை கவின்மிகு காட்சி ஆக்குகிறார். ஆழ்வார்களின் அருளிச் செயலில் ஊன்றிய மனத்தவறான கம்பர் பெருமானின் திருமேனி அழகை சூர்ப்பனகை வாயிலாக வெளியிடும் அழகு வர்ணிக்கும் நிலம் அன்று.
செந்தாமரைக் கண்ணோடும்
செங்கனி வாயினோடும்
சந்து ஆர்தடந்தோளோடும்
தாழ்தடக்கைகளோடும்
அம்தார் அகல்த்தோடு
அஞ்சனக்குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும்:
அல்வல்வில் ராமன் என்றாள்
ஒருத்தி பரமாத்மா என்று சங்கு, சக்ர, கதா தரணாகிய பிரபுவின் பரத்துவத்தை கொண்டாடுகிறான். மற்றொருத்தி வல்லின்ராமன் என்று அதே மேன்மையை மொழிகிறாள்.
செந்தாமரைக் கண் என்பதால் பரத்வ, சாத்வீக தெய்வத்தின் பெருமை புலனாகிறது. இன்று இந்த திருக்கோலம் முழுதையும் தவிப்பவர்களுக்கு சூர்ப்பனகை எத்தகையதொரு ரஸப்ரவாஹத்தில் மூழ்கினாள் என்பது தெரியும்.
நல்ல சந்தனம் பூசப்பட்ட திவ்யமான நீண்ட பெரிய கரங்கள் உடையவன் என்பதால் சதுர்புஜம் அவளுக்கு சேவையாகியுள்ளது தெரிகிறது. வரதனும் திருமஞ்ஜனம் முடிந்து, அழகிய செஞ்சந்தனம் திருமேனியில் பூசிக்கொண்டு, அழகிய மாலைகளை சாற்றிக்கொண்டும், ஒரு நீல மலை போல் வந்தவன் யாரிவன்? “வல்வில் ராமன் என்றான்” – வரதன் கைவில்லையும் மங்களாசாஸனம் செய்தாள்.
மேலும் பிராட்டியின் வடிவழகைப் பேசும்போது
நித்யஸ்ரீ நித்ய மங்களமாக அவனுடன் சேர்ந்த சேர்த்தியை வர்ணிக்கிறாள். இப்படி வில்பிடித்த கரத்தோடு நிற்கும் நிலையை ராவணன் குடும்பமே கொண்டாடியது என்றால் நாம் எம்மாத்திரம். அன்று இளையாழ்வாராம் ராமானுஜரைக் காப்பாற்ற பிராட்டியுடன் வந்தாலும் இங்கு, இன்று அர்ச்சையில் உபய நாச்சிமாருடன் சேவை.
பின்னர் பெருமாளின் புறப்பாடு ஆரம்பம். ஆம் அங்கு எம்பெருமானுடன் எம்பெருமான் எழுந்தருளுவதை சேவிக்க ஆரணதேசிகன் காத்திருக்கிறாரன்றோ. இவ்வுத்ஸவமே அவரை பகுமானிக்கத்தானே. அதிஸம்ப்ரமமாக (சிறந்த த்வனியுடன்) உடல் திருச்சின்னம் பரிமாறப்பட்டது. விந்த்ய மலைக் காடுகளிலிருந்து எவ்விதம் எழுந்தருளினானோ அதேபோன்று சிறிது காட்டு வழிப்பயணம். திருமேனி துளியும் அலுங்காமல் ஸ்ரீபாதம் தாங்கிகள் ஒய்யாரமாக எழுந்தருளப் பண்ணினார். திருவரங்கத்தின் சிறப்பை வர்ணிக்கும்போது பெருமாளுக்கு சதுர்கதி (நான்குவித நடையழகு) என்பர். அதாவது வெளியே புறப்பாடு, உள்ளே எழுந்தருளல் என்று ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு விதமான நடைய்உண்டாம்.
ஆனால் வரதன் எப்போது புறப்பாடு கண்டருளினாலும் ஒரே கதிதான். அதாவது ஒரே மாதிரியான வேகம். அது விலக்ஷணமானது. ஏனென்றால் அவன் அடியார்களுக்கு அவன் ஒருவனே கதி. அவனுக்கு ஒரே கதி. (கதி என்றால் புகழ் என்றும் நடை என்றும் பொருள். ரசிகர்கள் ஊன்றி படித்திடுக.)
ராமனின் தண்டகாரண்ய யாத்திரையை வால்மீகி நயம்பட உரைக்கிறார். முன்புறம் வில்லேந்திய ராமன் அவன் பின் மெல்லிய இடையுள்ள சீதை. அதன்பின்னர் வில்லைக் கையேந்திய லக்ஷ்மணன் என இம்மூவரும் சென்றதைக் கண்டு வியக்கிறார்.
ஸ்ரீவைஷ்ணவத்தின் முக்கியமான கோட்பாடே ப்ரணவத்தின் சீறிய பொருளை உணர்வதுதான். அதாவது அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்களின் தொகுதி ஓம்காரம். அதாவது ப்ரணவம் இதில் அ என்பது பகவானையே குறிக்கும். அ என்றால் எம்பெருமான். அதுபோன்றே உ என்றால் மஹாலக்ஷ்மி உ காராம் மஹாலக்ஷ்மியைக் குறிக்கும். மேலும் ம என்பது ஜீவனாகிய நம்மை காண்பிக்கிறது.
முன்புறம் ராமன், பின்னர் சீதை, பின்னர் லக்ஷ்மணன் சென்றது ப்ரணவத்தின் பொருளானது. பெருமாள், பிராட்டி இவர்களுக்கு அந்தரங்க அடிமை செய்யும் லக்ஷ்மணனைப் போன்ற ஜீவன். இதைக் கொண்டு ப்ரணவத்தின் பொருளை தனக்கு தனது மாதுலர் (மாமா) ஆத்ரேய ராமானுஜாசாற்யார் (அப்புள்ளார்) உபதேசித்ததாக சுவாமி தேசிகன் சாதிக்கிறார்.
இதே கோலத்தில்தானே விந்த்ய மலையிலிருந்து ஸ்ரீபாஷ்யகாரருடன் நடந்து வந்தான் வரதன். அங்கு ராமன் சீதை. இங்கு வரதன் பெருந்தேவி. அங்கு இளையபெருமாள் லக்ஷ்மணன். இங்கு இளையாழ்வார் லக்ஷ்மண முனி. அங்கு தனுஷ்பாணி வில்லுடன் லக்ஷ்மணன். இங்கு த்ரிதண்டபாணி த்ரிதண்டத்துடன் இளையாழ்வார். இவையிரண்டுமே ப்ரணவத்தின் பொருளை விளங்க வைப்பனவாயிற்றே.
ஆகையால் தனக்கு அப்புள்ளார் அருளிய அர்தவிசேஷத்தை நேரில் சேவிக்க எதிர்பார்த்து காத்திருக்கிறார்! தூப்புல் மாபுருடன். தேசிகோத்தமனுக்கும், அவனடியார்களுக்காகவுமன்றோ இத்திருக்கோலம் என்று வரதனும் விரைவாக எழுந்தருளினான்.
தூப்புல் வாசலில் தரிசன தாம்பூலம் ஆனதும் பெருமாளைப் பின்தொடர்ந்து ஸ்ரீபாஷ்யகாரர், அவரை தொடர்ந்து சுவாமி தேசிகன், அவரை தொடர்ந்து தீதிலா நல்லோர் திரளான அடியார்கள் உள்ளே நுழைந்தனர்.
சாதாரணமாக சங்கு, சக்ர, கதா அபயஹஸ்தத்துடன் எழுந்தருளும் ப்ரபு இன்று வல்வில் ராமனாகிய சேவை சாதிப்பதைத்தான் தேசிகன் வரதராஜ பஞ்சாஸத்தில் ச்லோகங்களால் பாடினாரோ!
“ஹேய் வரத! இடைவிடாது தீய செயல்களை செய்தேன். செய்துக் கொண்டிருக்கிறேன். நாளடைவில் அவைகள் பெரும் மரங்களாகி வேரூன்றிவிடும். அத்தகையதொரு நிலை உண்டானால் அது உன்னாலும் தடுக்க முடியாது. ஆகையால் அவைகள் வேரூன்றுவதற்குள் நீ வில்லையேந்தி என்னருகே எழுந்தருள வேண்டும். அடியேனின் பாபமுளைகளை அறுத்து காத்தருள வேண்டும்” என்கிறார்.
இது சுவாமியின் பாபம் பற்றியதா என்ன? நம்மைப் போன்றவர்க்காகவன்றோ அருளியது. ஆகையால் இன்றைய தினம் வரதன் ஸ்ரீபாஷ்யகாரருடன் சேர்ந்து எழுந்தருளியது தேசிகோத்தமனுக்கு இரட்டிப்பு குதூகலம்.
ஸங்கல்ப சூரியோதயத்திலும், அபயப்ரதான ஸாரத்திலும் ஸ்ரீமத் ராமாயணத்தின் தாத்பர்யத்தை சேவிக்கும் போது அனுமனைப் போன்ற ஆசாரியன் சீதை நிலையுள்ள ஜீவனைக் கண்டு ஆச்வஸம் செய்து பரமாத்மாவிடம் சேர்கிறான் என்று விவரணம் செய்கிறார். மேலும் தனக்குண்டான வருத்தத்தையும் ஸங்கல்ப சூரியோதயத்தில் நீக்கிக் கொள்கிறார். அதாவது ஸ்ரீபாஷ்யகாரர் எழுந்தருளியிருந்து, தான் அவர் முன்னிலையில் வாதப்பிரதிவாதங்கள் செய்து; ராமானுஜ ஸித்தாந்தத்திற்கு எதிர்வாதம் செய்பவரை அடக்க வேண்டும்” ஆனால் யதிராஜர் வாழ்ந்த காலத்தில் பிறக்கவில்லையே எனும் குறையுடனிருந்தார். அதைப்போக்கும் விதமாக ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ஸ்ரீபாஷ்யகாரரை ஆசார்யராகவும், தன்னை சிஷ்யராகவும் பாவித்து வாதம் செய்கிறார். அச்சமயம் “எதிர் வாதிகளான லங்கை அரக்கர் போன்றவர்க்கு அனுமானைப் போன்ற பராக்கிரமம் வாய்ந்த உன்னால்; த்வஜஸ்தம்பம் நன்கு ஆட்டி, ஆட்டி கெட்டிப்படுமது போன்ற நம் ஸித்தாந்தத்தை நிலைநிறுத்துவாயாக” என்றுஆசார்யர் அனுக்ரகம் செய்கிறார்.
அதன்படி பார்த்தால் த்ற்போது ஆசார்யரான ஸ்வாமி தேசிகன் அனுமனின் ஸ்தானம். பம்பை நதிக்கரையில் வில்லேந்திய ராமலஷ்மணர்களை சேவித்தபோதே “இந்த்ர தனுசைப் போன்று பெரும் வில்லைக் கையேந்திய இவர்கள்” என்று கொண்டாடுகிறார் அனுமான் கிஷ்கந்தாகாண்டத்தில் அதுபோன்று பெருமானையும், இளையாழ்வாரையும் கொண்டாடுகிறார்.
மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ
மகரம் சேர் குழையிருபாடிலிங்கியாட
எய்வண்ண வெஞ்சிலை துணையா…
என்று கலியன் பேரருளாளன் பெருமை பேசினார். அக்கலியனுரை குடிகொண்ட கருத்துடையோனான சுவாமி அந்த பாசுரத்தில் பொருத்தத்தை இங்கு வரதன், ஸ்ரீ பாஷ்யகாரர் விஷயமாக அனுசந்திப்பது (நினைந்து உருகுவது) தன்னேற்ற மன்றோ!
மேலும் பெருமாள், பிராட்டி, ஸ்ரீபாஷ்யகாரர் என மூவரும் ஒன்றாக வந்தபோது சரணாகத ரக்ஷணத்தின் ப்ரபாவத்தை உலகறிய செய்யும் திருக்கோலமாகிய தேசிகன் மங்களாசாஸனம் (போற்றி) செய்கிறார். அதாவது
வில்லில் பாணத்தை தொடுத்து இலக்கினில் எய்வது போன்று எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்வதை ஸ்ரீபாஷ்யகாரர் காட்டிய வழியில் சுவாமி விளக்குகிறார். ஒருவேளை எம்பெருமான் ஜீவனின் குற்றத்தால் சீற்றம் கொண்டாலும், அவனை தண்டிக்க நினைத்தாலும்” அஞ்சலி எனும் எதிரம்பு கொண்டு அருள்வரதர் நிலையில் அம்பென அழிந்திடும் ஆற்றலை தேசிகோத்தமன் காண்பிக்கிறார் போலும்.
ஜனகருடைய வேள்விச்சாலைக்கு எழுந்தருளிய ராம, லக்ஷ்மணர்களை யாரென்று? ஜனகர் வினவியது கண்டு “பெரும் வில்லில் ஆராய்ச்சிமனம் கொண்டவர்கள்” என்கிறார் விஸ்வாமித்ரர். அதற்கு உள்ளுறையாக (ஆராய்ச்சி) ஜிஞ்ஞாஸா – என்பதற்கு பிராட்டியின் சேர்க்கையுடன் சரணாகத ரக்ஷணம் செய்வதற்காக வந்துள்ளனர் நமாசார்யார்கள் இங்கு சுவையான பல பொருள்களை உரைப்பர்.
விச்வாமித்ர கோத்ர பூஷணராகிய (அலங்காரமாகிய)) நம் ஸ்வாமியம் “எய்வண்ண வெஞ்சிலையுடன் வந்த வரதனின் சரணாகத தர்மத்தை நமக்கு விவரணம் செய்வது போன்று சேவை இது.
விச்வாமித்ரர் “மஹாத்மாவாகிய ராமனை நானறிவேன்” என்றார். ஆரண்யத்தில் மஹரிஷிகள் “ராமா! நீயே ஸர்வரக்ஷகன் என்று நாங்கள் அறிவோம்” என்றனர். விராதன், கபந்தன், அனுமான் இவர்கள் மூலமாகவும் ராமனின் பெருமை காண்பிக்கப்பட்டது. இவையனைத்தையும் விட “பரமாத்மா” எனும் மண்டோதரியின் வாக்யம் மிக மிக சிறப்பு வாய்ந்தது.
இந்த விவரணங்கள் அனைத்துமே “சரணாகத ஸம்ரக்ஷணம் செய்பவர்” என்னுமதையே உறுதிப்படுத்துகின்றன. அந்த சரணாகதி மார்க்கத்தை ஸ்ரீபாஷ்யகாரர் வழியில் நெறிப்படுத்தியவர் ஸ்வாமி தேசிகன். சஸ்த்ரபாணியாக (ஆயுதத்துடன்) பெருமாளும், சாஸ்த்ர பாணியாக (சாஸ்த்ரத்துடன்) ஸ்ரீ பாஷ்யகாரரும் எழுந்தருளினர் இந்நிலையைக் கொண்டாடுகிறார். “தர்மோ விக்ரஹவாந் தந்வீ” என்று தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக தந்வீ – உயர்ந்த வில்லை கையில் கொண்டான் என்கிறார்.
இப்படி ஸ்வாமியின் அனுபவத்திவ்லைகளில் வ்லைகளில் நமக்கும் கொஞ்சம் கிடைத்தது. 9 1 1999 வருடம் அடியேன் ஆசாரியர் ஸ்ரீ உ.வே. புரிசை ஸ்வாமி நியமனத்துடன் “ஸிம்மங்களின் சல்லாபம்” எனும் தலைப்பில் அனுஷ்டானகுள உத்ஸவத்தின் வைபவத்தை எழுதி வெளியிட்டிருந்தேன். அதனையும் ரசிகர்கள் அனுபவிக்க வேண்டுகிறேன்.