“அருளாளன் பேரருள்” Part – 6
“தீர்த்தன் ராமானுசன்” எனும் பாகத்தில் உத்தமவர்த்தலம் அமைத்ததோர் எழில்தனுவின் உய்த்தகணையால் அத்திரவரக்கன் முடிபத்தும் ஒரு கொத்தென உதிர்த்த திறலோனாக ராமன் ராவண வதம் செய்தான் என்றும், “இவனன்றோ பரமாத்மா” என்றும், கட்கண்ணால் காணமுடியாத அந்தவுருவை நெஞ்சென்னும் உட்கண்ணால் காண வேண்டும் என்றும், சரணாகதியே கதி என்று காட்டிய வள்ளல் ராமானுஜர் எழுந்தருளி இந்த அர்சாதிருமேனியான தேவதேவனை சேவிப்பதே புருஷார்த்தம் என்றும் பார்த்தோம். இன்னும் தொடரும்…
தொடர்ந்து வரதனுடைய வைபவங்களை அனுபவித்திடுங்கள்…
இனி ஸ்ரீAPN ஸ்வாமியின் அருளாளன் பேரருள் Part – 6 தொடரும்…
“தீர்த்தன் ராமானுசன்”
பாஷ்யக்காரர் எழுந்தருளியது தீர்த்தகுடத்துடன். வரதரை ஆழிமழைக் கண்ணன் முத்தி மழைபொழியும் முகில்வண்ணன் “எங்கள் ஸ்ரீபாஷ்யகாரர் தினந்தோறும் சமர்ப்பித்தருளும் சாலைக்கிணறு தீர்த்தம் பருகி பக்தர்களுக்கு அவர்களின் விருப்பம்விட அதிகமாக அருள் மழை பொழிகிறான்” என்கிறார் நம் சுவாமி தேசிகன். இவை அனைத்தையும் ஒருங்கிணைந்த எங்களுக்கோ கண்களில் ஆனந்தபாஷ்யம் “கண்களில் ஆனந்த கண்ணீர் துளிக்க உன்னை வணங்குகின்றனர் வரதா” என்ற தேசிகோத்தமனின் சொல்லமுதை அனுபவபூர்வமாக உணர்ந்தோம். அதுவும் சாற்றுமறை ச்லோகத்திற்கு ஸ்ரீ பாஷ்யகாரர் எழுந்தருளினது பரிபூரண அனுக்ரஹம்தானே.
முழுவதும் பாராயணம் முடிந்தபோது பெருமாள் திருமஞ்ஜனத்திற்கு தயாராக இருந்தார். இதுவரையிலும் சேவையான திருமேனி சோபைவேறு. இப்போது சேவையானது வேறு. ஆம் ஆவணங்களே இல்லாமல் மெலிதானதொரு கைவழி (ஒரு மெல்லிய வஸ்திரம்) சாற்றிக்கொண்டு மல்லாண்ட திண்தோள் மணிவண்ணனாக நின்ற கம்பீரம். அப்பப்பா! சிறிய திருவடி பம்பை நதிக்கரையில் கண்டது போன்றதொரு கோலம் அது.
“நன்கு உருண்டு, திரண்டு, பருத்து, பணைத்த தோள்கள் உடைய வீரர்களே, அனைத்து விதமான பூஷணங்களையும் அணியவேண்டிய இத்திருமேனியில் எதற்காக ஆபரணங்கள் அணியாமல் உள்ளீர்!” என்றார் திருவடி (அனுமான்). அதன் பொருள் என்னவென்றால் பெருமாளுக்கு ஆபரணங்கள் அழகு செய்யவில்லை. குணங்களே அவனை அண்டிதான் அழகு (பெருமை) பெறுகின்றன என்றால், ஆபரணங்களுக்கு கேட்கவா வேண்டும். அப்படியெனில் அனுமானின் நோக்கம்தான் என்ன? எதற்காக இப்படி சொன்னான் என்றால் நம் பூர்வாசார்யர்கள் சுவையான வ்யாக்கியானமொன்று அருளுகின்றனர்.
“ஹே ராமா! மரத்தினின்று மரம் தாவும் குரங்கு ஜாதியில் பிறந்தவர் நாங்கள். வெகு சாமான்யமான புளியம் பழத்தைக் கண்டால் கூட விரும்புமவர்கள், எங்களை வசப்படுத்த நீ இப்படி ஸர்வாவயவ சௌந்தர்யத்தைக் காண்பிக்க வேணுமா? எங்களின் கண்ணெச்சில் (த்ருஷ்டி) படப்போகிறதப்பா! நல்ல பெரிய பதக்கங்களும் அட்டிகைகளும் சாற்றிக் கொண்டு திருஷ்டி படாமல் உன் திருமேனியை மறைத்துக்கொள்” என்றாராம் திருவடி.
அன்று அங்கு பம்பைக்கரையில் அனுமான் சொன்ன வார்த்தை இன்று இங்கு அனுஷ்டான குளக்கரையில் வரதனின் திவ்ய திருமேனியை சேவித்தபோது உள்ளத்தில் உணர்வலைகளை உண்டாக்கியது. மின்னு மாமழை தவழும் மேகவண்ணனின் திருமஞ்ஜனம் தாகமெடுத்ததொரு மேகம் தண்ணீரில் குளிப்பது போன்றிருந்தது.
இருபுறமும் உபயநாச்சியமாருடன் சேர்ந்த சேர்த்தி “மின்னல் கொடிகளால் சேர்ந்த (சூழ்ந்த) காளமேகம் போன்றது” எனும் வேத வாக்கியத்தின் பொருளை ஸ்ரீபாஷ்யகாரரின் சிஷ்யர்களாகிய நமக்குத் தெளிவாக காண்பிப்பது போன்றதொரு திருக்கோலம். இதைத்தானே தேசிகோத்தமனும் பல உவமைகளில் பாடினார்.
இதுவரையிலும் நம் கர்ம வினைகளால் மறைக்கப்பட்டிருந்த எம்பெருமானுடைய குணங்கள், பதங்கள், இப்போது நன்கு தெரிகின்றன. (அதாவது கர்மபந்தத்திலிருந்து விடுபட்டாலன்றோ எம்பெருமானை தெளிவாக அனுபவிக்க முடியும்) அதற்கு நம்மாசாரியர்கள் செய்யும் உபதேசம் அன்றோ காரணம். இங்கு ச்ருதிவாக்கியங்களுக்கு சங்கரர் முதலானோர் செய்த குயுக்தி, குத்குருஷ்டி (தவறான பொருள்) வாதங்களை கண்டித்து, பாஷ்யகாரர் ஸந்மதஸ்தாபனம் செய்தாரன்றோ. ஸ்வாமியினுடைய பாஷ்யம் ஸத்யை காலம்பிபாஷ்யம் – அதாவது ப்ரம்மமும், அதைச் சார்ந்த அனைத்தும் ஸத்யம். அவன் திருமேனி, குணங்கள் என அனைத்தும் ஸத்யம். இப்படி எம்பெருமானாராம் ஸ்ரீபாஷ்யகாரர் உபதேசித்து, ஏற்றி மனத்தெழில் ஞானவிளக்கை, இருளனைத்தும் மாற்றியதால் இங்கேயே பரப்ரஹ்மத்தை அனுபவிக்கும் பேறு கிட்டியது.
இது ஏரணிகீர்த்தி ராமானுஜரின் இன்னுரை சேர் சீரணிச்சிந்தையாலன்றோ கிடைத்த பாக்யம். இங்குள்ள வேதார்த்த ஸங்க்ரஹ வரிகள் அனைத்துமே வரதனின் வைபவத்தை பேசுவதை மஹான்கள் உணரலாம்.
தொடரும்…